ஹட்டன் வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட மஸ்கெலியா நல்லதண்ணி தமிழ் மகா வித்தியாலயம் ஆசிரியர் பற்றாக்குறையினால் கடும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் விசனம் தெரிவித்துள்ளனர்.
500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் குறிப்பிட்ட பாடசாலையில் 17 ஆசிரியர்கள் மாத்திரமே பணிபுரிவதாகவும், பல வகுப்புகள் பாடநேரத்தில் கல்வி நடவடிக்கைகள் இன்றி காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் வெற்றிடத்திற்கு கடந்த மூன்று மாதங்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எனவே இதற்கு உரிய தீர்வை பெற்று ஆசிரியர்களையும் நியமிக்குமாறு பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஹட்டன் வலய கல்வி பணிமனையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.