பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதலுக்காக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து உத்தரப் பிரதேச வாலிபரை திருமணம் செய்தார். பெங்களூருவில் வாழ்ந்தவந்த அந்த தம்பதியை காவல்துறை கைது செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முலாயம் சிங் யாதவ் என்ற 26 வயது இளைஞர் பெங்களூருவில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு லூடோ விளையாட்டில் ஆர்வம் அதிகம்.
அவ்வாறு செல்போனில் லூடோ விளையாடிக் கொண்டிருக்கும் போது இர்கா ஜீவானி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 19 வயதான அந்த பெண் தான் ஹைதராபாத்தில் வசிப்பதாகக் கூறி பழகியுள்ளார்.
இருவருக்கும் இது காதலாக மாறியது. பின்னர் சிறிது காலத்திற்கு பின்னர் தான் அந்த பெண் இந்தியாவை சேர்ந்தவர் அல்ல, பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.
இருப்பினும் இருவரும் காதலை விட முடியாமல் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, அந்த பெண்ணை வீட்டைவிட்டு வெளியேறி நேபாள நாட்டின் காத்மண்டுவுக்கு வரச் சொல்லியுள்ளார் முலாயம்.
அந்த பெண்ணும் நேபாளத்திற்கு வர அங்கு அந்த பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். பின்னர் பீகார் வழியாக இந்தியா வந்து, பெங்களூருவில் தங்கி குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணின் பெயை ராவா யாதவ் என மாற்றி அவருக்கு ஆதார் அட்டையும் பெற்றுள்ளார். இந்நிலையில், மாநில உளவுத்துறையின் சந்தேகத்தின் பேரில் அந்த பெண் காண்காணிக்கப்பட்டார்.
அதன் அடிப்பைடயில் நடைபெற்ற சோதனையில் உண்மை அம்பலமானது. இருவரையும் பெங்களூரு காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது.அந்த பெண்ணை காவல்துறையினர் வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர். கணவர் முலாயமை காவல்துறை சிறையில் வைத்துள்ளது.