பொருளாதார நெருக்கடி காரணமாக, மைக்ரோசாஃப்ட் முதல் அமேசான் வரை பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனன. இந்நிலையில், கணிப்பொறி சந்தையில் முன்னணி இடம் வகித்துவரும் டெல் நிறுவனமும் 6 ஆயிரத்து 650 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 5 சதவீதம் பேர் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் எதிர்காலம் குறித்த கேள்வி எழுவதாக தொழிலாளர்களுக்கு இணை தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் கிளார்க் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணத்தைக் குறைப்பது, ஆட்கள் தேர்வை நிறுத்துவது போன்ற ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என்பதால், ஆட்குறைப்பில் ஈடுபடுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் டெல் நிறுவனத்தின் கணிப்பொறி விற்பனை கடந்த ஆண்டைவிட 37 சதவீதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஹெச்பி, சிஸ்கோ சிஸ்டம்ஸ் போன்றவையும் ஆட்குறைப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.