திருகோணமலை – புல்மோட்டை பகுதியில் இடம்பெற்ற மோதலில் இருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (29) பிற்பகல், காணி தகராறு காரணமாக இரு குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புல்மோட்டை பாம்ஹவுஸ் என்ற இடத்தில் விவசாய காணிக்குள் ஏற்பட்ட எல்லை பிரச்சினை காரணமாகவே இரு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த கைகலப்பில் புல்மோட்டை- 01 வட்டாரத்தைச் சேர்ந்த எஸ்.எம்.பதூர் (42வயது) மற்றும் புல்மோட்டை- நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த எம்.எம்.சலீம் (42வயது) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் புல்மோட்டை தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, படுகாயமடைந்த நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் புல்மோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.