நுவரெலியா இலங்கையின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். தமிழ் பேசும் மக்களைக் கொண்ட நுவரெலியாவிற்கு ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
எனினும் நுவரெலியா பிரதான நகரான நுவரெலியா பதுளை வீதியில் இரண்டு இடங்களில் சிங்கள மொழியில் மட்டும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளமை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நுவரெலியா தனியார் பேரூந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தொலைதூரப் பகுதிகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திற்குள் நிறுத்தப்படாமல், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் தனியான பேருந்து நிறுத்தம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த இடத்தில் சிங்கள மொழியில் மட்டும் அறிவிப்பு பலகை உள்ளது. இதன் காரணமாக சிங்களம் பேசாத சாரதிகள் வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்து பொலிஸாரால் அபராதம் விதிக்கப்படுகிறது.
எனவே, அரசின் மும்மொழிக் கொள்கைக்கு சம அந்தஸ்து வழங்கும் வகையில், மூன்று மொழிகளிலும் அறிவிப்புப் பலகைகளை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.