பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த வழக்கில் அடையாளம் காணப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றின் 11 வயதுடைய இரு மாணவர்கள் இருவேறு சந்தர்ப்பங்களில் முகமூடி அணிந்த நபர்களால் கடத்த முயற்சிப்பதாக பொலிஸ் நிலையத்தில் இம்மாதம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தனர்.
அத்துடன், கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கமெராக்களின் உதவியுடன் விசாரணை இடைநிறுத்தப்பட்ட நிலையில், மாணவர்களை கடத்த முயன்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடையவர்.
இச்சம்பவத்தில் முகத்தை தலைக்கவசம் மற்றும் முக கவசம் அணிந்தவாறு மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் சில மாணவர்களை இலக்கு வைத்து இவ்வாறு கடத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பாடசாலை மாணவர்களை கடத்த முற்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, நேற்று (29) கல்முனை நீதவான் முன்னிலையில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட மாணவியால் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சந்தேக நபரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.