சென்னை : திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தின் நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல. மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டி லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு எதிரான அரசு திராவிட மாடல் அரசு என சென்னை கொளத்தூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 2000 நபர்களுக்கு 12 விதமான மளிகை பொருட்கள், புத்தாடைகள், கிறிஸ்மஸ் கேக், ரொக்கமாக ரூ.1000 ஆகியவற்றை வழங்கினார். இதேபோல் பல்வேறு தேவாலயங்களில் பணியாற்றும் போதகர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின்
கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்த மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, இதனைத் தொடர்ந்து தேவாலயங்களில் அருட்சகோதரிகளாக பணிபுரிபவர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசு பொருட்கள் வழங்கி அவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலினோடு அமைச்சர்கள் கே என் நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, பள்ளி நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
கிறிஸ்மஸ் விழா
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து கிறிஸ்மஸ் விழாவை கொண்டாடி வருகிறோம். எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் வாய்ப்பு வழங்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். இந்த இனிய விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இனிமை, இன்பம், மகிழ்ச்சி, ஊக்கம், உற்சாகம் பெற நான் எப்போதும் கொளத்தூரைத் தான் நாடுவது உண்டு. கிறிஸ்மஸ் பெரு விழாவை ஒரு மதத்தின் விழாவாக நினைக்கக் கூடாது இது அனைத்து மத மக்களுக்கான விழாவாக பார்க்க வேண்டும்
திராவிட மாடல்
திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தின் நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல. மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டி லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு எதிரான அரசு திராவிட மாடல் அரசு . ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற திருமூலரின் வாக்கு அதுவே திமுகவின் கொள்கை. ஏழையின் ஒரு துளி கண்ணீரை துடைக்கும் அரசாக திராவிட மாடல் அரசு இருக்கும்
அனைவரும் தமிழரே
ஜாதி மதத்தின் பெயரால் ஏழை மக்களை ஏமாற்றி விட யார் நினைத்தாலும் அதனை தடுப்போம். கிறிஸ்தவர்கள் கல்வி மற்றும் மருத்துவ துறைக்காக ஆட்சியை பணிகள் யாராலும் மறுக்க முடியாது என குறிப்பிட்ட அவர் மதத்தால் வெவ்வேறாக இருந்தாலும் மொழியால் நாம் அனைவரும் தமிழரே அதனால் மத நல்லிணக்கத்தை முன்வைத்து ஒற்றுமையோடு இருப்போம் என குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர், அனைவருக்கும் தனது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.