துபாய் அரச குடும்பத்தில் வேலைப் பார்ப்பவன் என்று ஏமாற்றி டெல்லி லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்லில் ஒரு நபர் ரூ.25 லட்சம் மோசடி செய்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி நட்சத்திர ஹோட்டல்கள் நடத்தும் நிறுவனமான தி லீலாவின் பிரம்மாண்ட லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டல் டெல்லியில் உள்ளது.
இந்த ஹோட்டலில் கடந்தாண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முகமது ஷெரிப் என்ற நபர் ரூம் எடுத்து தங்கியுள்ளார். அறை எண் 427இல் தங்கிய இவர், தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வருகிறேன்.
அங்குள்ள அபுதாபி அரச குடும்பத்தில் வேலை பார்க்கிறேன். ஷேக் ஃபலா பின் சயத்த் அல் நஹ்யானின் முக்கிய ஊழியர் நான்.
வணிக வேலையாக நான் இந்தியா வந்துள்ளேன் என தனது பிஸ்னஸ் கார்டு, அமீரக ஆவணங்கள் ஆகியவற்றை சமர்பித்துள்ளார்.மேலும், ஹோட்டல் ஊழியர்களிடம் தனது அமீரக வாழ்க்கை குறித்து கதை கதையாக அளந்து விட்டுள்ளார்.
பல மாதங்கள் அங்கு தங்கிய நிலையில் ஹோட்டல் பில்களும் எகிறிய வண்ண் இருந்தன. இந்நிலையில், சுமார் நான்கு மாதம் அங்கு தங்கியிருந்த முகமது ஷெரிப் கடந்த நவம்பர் 20ஆம் தேதி சத்தமே இல்லாமல் கம்பி நீட்டியுள்ளார்.
மேலும், ஹோட்டலில் இருந்து வெள்ளி பாத்திரங்கள், முத்து ட்ரேக்கள் போன்ற விலை மதிப்பு மிக்க பொருள்களை திருடி சென்றுள்ளார்.
முகமது ஷெரிப் தங்கிய நான்கு மாதத்திற்கு மொத்தம் ரூ.35 லட்சம் பில் வந்துள்ளது. ஆனால், அந்த நபரோ ரூ.11.5 லட்சம் மட்டுமே செலுத்தியுள்ளார்.
எனவே, அந்த நபரிடம் லீலா பேலஸ் சுமார் ரூ.23 லட்சம் ஏமார்ந்துள்ளது. இது தொடர்பாக டெல்லி காவல்துறையிடம் லீலா பேலஸ் நிர்வாகம் புகார் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை முகமது ஷெரிப்பை ஆவணங்களை சோதனை செய்து தேடி வருகிறது.