பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே திவாலாகி விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஒப்புக் கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான அந்நாட்டின் நாணய மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உச்சம் பெற்றது. இதன் நீட்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது. குறிப்பாக ஒரு லிட்டர் பால் பாகிஸ்தான் ரூபாயில் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர், பாகிஸ்தான் அரசு ஏற்கெனவே திவாலாகி விட்டது என்றார்.
இம்ரான் கான் தலைமையிலான ஆட்சியில் நாட்டில் பயங்கரவாதம் வளர்ந்ததே இதற்கு பிரதான காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். இம்ரான் கானின் மோசமான ஆட்சியால், பயங்கரவாதமே பாகிஸ்தானின் இலக்கு என்று மாறி விட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் வேதனை தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டத்தை ஒழுங்காக கடைப்பிடிக்காத ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று ஆசிஃப் கூறினார்.