புதுடில்லி: அறிவியல் களத்தில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
108வது அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஸ்டார்ட் அப் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. 2015 வரை 130 நாடுகளில் இடம்பெற்ற பட்டியலில் 81வது இடத்தில் இருந்தது. ஆனால், 2022ல் 40வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம்.
தகவல்களும், தொழில்நுட்பமும் தான் இந்தியாவை முன்னெடுத்து செல்கிறது. அதில், இந்தியாவின் அறிவியல் அமைப்பிற்கு முக்கிய பங்கு உண்டு. புதிய சாதனைகள் படைப்பதிலும் அந்த அமைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தொழில்நுட்பம் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
அறிவியல் களத்தில் முன்னணியில் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அறிவியல் மூலம் இந்தியாவை தன்னிறைவு பெற செய்ய வேண்டும். ஆய்வகத்தில் இருந்து நிலத்திற்கு செல்லும் போது தான் அறிவியல் முயற்சிகள் பலன்களை தரும்.
2023ம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறுதானியங்கள் மற்றும் அவற்றின் பயன்பாட்டை அறிவியல் மூலம் மேம்படுத்த வேண்டும். நமது நிஜ வாழ்க்கையில் அறிவியலை கொண்டு வர வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.