டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. குளிர்கால விடுமுறைக்கு பின்பாக மனுக்கள் விசாரணை செய்யப்படும்.
அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிரிந்துள்ளன. சென்னை வானகத்தில் அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி ஜூலை 11-ல் பொதுக்குழுவை கூட்டியது. அப்பொதுக்குழுவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்பொதுக் குழு கூட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை11 அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது; அதிமுகவில் ஜூன் 23-ந் தேதிக்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பெஞ்ச், நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை ரத்து செய்தனர்; அத்துடன் ஜூலை 11-ல் ந் தேதி இபிஎஸ் கோஷ்டி நடத்திய பொதுக்குழு செல்லும் எனவும் தீர்ப்பு அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கேவியட் மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி பெஞ்ச் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.