குடியரசு தினத்தன்று அரசு பிரதிநிதிகள், தலைவர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்தளிப்பது வழக்கம். நேற்று முன் தினம் நடந்த ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்திருந்தன. எனினும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக அமைச்சர்களும் தேநீர் விருந்தில் கலந்துகொண்டனர்.
கூட்டணி கட்சிகள் புறக்கணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இது குறித்து திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அதில் “ஆக்கப்பூர்வமான அரசின் செயல்பாடுகள் தேக்கநிலை அடைய வேண்டும் என்பதற்கு ஆளுநரும் இடம் கொடுக்கவில்லை. முதல்வரும், மற்றெல்லாப் பிரச்சினைகளிலும் கையாளும் பெருந்தன்மையுடன் கூடிய மென்மையான அணுகுமுறையையே குடியரசு நாளையொட்டிய நிகழ்வுகளிலும் பின்பற்றினார்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலமைச்சர், மோதல்களைத் தவிர்ப்பவரே தவிர, மோதலுக்குத் தயாராக இருப்பவர் அல்ல என்றும் எப்போதும் அவரது கண்களுக்குத் தெரிவதெல்லாம் சீரான ஆட்சி நிர்வாகம் மற்றும் வெகுமக்களுக்கு நாளும் ஆற்ற வேண்டிய நற்பணிதான் என்றும் விளக்கமளித்துள்ளது.