Friday, May 3, 2024
Homeஇந்திய செய்திகள்இந்தியாவில் வருகிறது மிக நீண்ட விரைவுச் சாலை …12 மணி நேரத்தில் 1,386 கி.மீ..

இந்தியாவில் வருகிறது மிக நீண்ட விரைவுச் சாலை …12 மணி நேரத்தில் 1,386 கி.மீ..

டெல்லி-மும்பை விரைவுச் சாலை சுமார் ஒரு லட்சம் கோடி மதிப்பில் 1,386 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது. இந்தியாவின் மிக நீண்ட விரைவுச் சாலையான இது, டெல்லி-மும்பை இடையிலான தொலைவை 12 சதவீதம் அதாவது சுமார் 130 கிலோ மீட்டர் குறைத்து, பயண நேரத்தை 50 சதவீதம் குறைக்கக்கூடியது. அதாவது தற்போது 24 மணி நேரமாக உள்ள பயண நேரம் 12 மணி நேரமாக குறைந்துவிடும்.

டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்த சாலை கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா, சூரத் உள்ளிட்ட நகரங்களை இணைக்கிறது. முக்கியமான 8 விமான நிலையங்கள், 13 துறைமுகங்களுக்கு பயனுள்ள வகையில் அமைக்கப்படும் இந்த சாலை நாட்டின் பொருளாதார மாற்றத்துக்கு முக்கிய பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஒருபகுதியாக ராஜஸ்தானின் டெளசா மற்றும் லால்சோட் பகுதிகளை இணைக்கும் 246 கிலோ மீட்டர் நீள வழித்தடப் பணிகள் நிறைவடைந்தன. டெல்லியில் இருந்து ராஜஸ்தான் தலைநகா் ஜெய்ப்பூா் செல்லும் நேரத்தை 5 மணி நேரத்தில் இருந்து மூன்றரை மணி நேரமாகக் குறைக்கும் இந்த சாலை, 10, 400 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெளசா-லால்சோட் வழிதடத்தை, ராஜஸ்தானின் தவ்சாவில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடி திறந்து வைத்தார் . பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நடப்பாண்டு பட்ஜெட்டில் சாலை பணிகளுக்கான மூலதன செலவுக்காக ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்

கடந்த 9 ஆண்டுகளாக, உள்கட்டமைப்புத் துறையில் மத்திய அரசு தொடர்ந்து அதிக முதலீடு செய்து வருகிறது என்றும் டெல்லி-மும்பை விரைவுச்சாலை மற்றும் உத்தரப்பிரதேசத்தையும் மும்பையையும் இணைக்கும் சரக்கு வழித்தடம் ஆகியவை நாட்டின் முன்னேற்றத்துக்கான இரண்டு வலுவான தூண்கள் என்று குறிப்பிட்டார்.

சுற்றுலாவுக்கு பெயர் போன ராஜஸ்தான் மாநிலத்தில், மும்பை-டெல்லி விரைவு சாலை மேலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments