Wednesday, May 8, 2024
Homeஇலங்கை செய்திகள்இந்திய மீனவர்களுக்கு அனுமதி.

இந்திய மீனவர்களுக்கு அனுமதி.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களிற்கு அனுமதி வழங்குவது தொடர்பில்
40ற்கும் மேற்பட்ட மீனவ அமைப்புக்கள் விரைவில் வீதிகளில் படகுகளை இறக்கி போராடவுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் வத்தை படகுகளிற்கு
அனுமதி வழங்க முற்படுவது
தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக மீனவ அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வடக்கு கடல் பகுதியியே இந்திய மீனவர்களின் ஊடுருவல் இருக்கும் என்பதனால் இவ்வாறானா ஓர் அனுமதி வழங்கும் நடவடிக்கையினை மேற்கொண்டால் நிச்சயமாக
வடக்கு மீனவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பர் எனத் தெரிந்துகொண்டும் அரசு
அனுமதி வழங்க முற்படுவது ஈழத் தமிழர்களும் தமிழ்நாட்டு தமிழர்களும் எந்தக் காலத்திலும் உறவாக மாறக்கூடாது என்ற அரசியல் நோக்கம் கொண்டது என்றே கூறப்படுகின்றது.

வடக்கு கடல் பரப்பிற்குள் எல்லைதாண்டி ஊடுருவிய சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் விறகாக வடக்கில் விற்கப்பட்டாலும் அவை வடக்கு மீனவர்களின் நன்மை
கருதிய விடயம் அல்ல என்பது ஏலத்தின் முடிவில் எத்தனை படகுகளை காணவில்லை என்ற தகவல் வெளிவந்தபோதே தமக்குத் தெரியும் என மீனவ சங்கப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது என்ன இரகசிய திட்டத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்களிற்கு
அனுமதி வழங்க முற்படுகின்றனரோ நாம் அறியோம்.
இந்த சூழ்ச்சியில் தமிழக மீனவர்கள் அகப்படக் கூடாது என கிளிநொச்சி மீனவ சங்கப் பிரதிநிதி தெரிவித்தார்.

இவ்வாறு வழங்கப்படும் அனுமதி தொடர்பில் ஏனைய மீனவ அமைப்புக்களின்
பிரதிநிதிகள் சார்பில் தொண்டமனாறு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசப் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களுடன் பேசிய சமயம் ரோளர் படகு இல்லாது இழுவைமடி அற்ற நாட்டுப்படகு
தொடர்பில் பரிசீலிக்கலாம். அதாவது இலங்கை இந்திய கடல்வள பாதுகாப்புக் குழு அமைத்து அவர்கள் ஊடாக மட்டுமே அனுக வேண்டும்.

அதற்கான நடைமுறைகளை அமைச்சு என்னும் பெயரில் கடல்தொழில் செய்யாத அட்டைப் பண்ணையாளர்களே விரைவில் கச்சதீவில் இவைதொடர்பில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு
செல்ல ஏற்பாடு இடம்பெறுகின்றது.

இவர்களுடன் அரசியல் கட்சியினரே செல்லவுள்ளனர்.
அதனால் இந்த பேச்சுவார்த்தையை ஏற்க முடியாது.
ஏனெனில் குருநகரில் 39 ரோளரும் வல்வெட்டித்துறையில் 29 ரோளரும் இழுவைமடித் தொழில்
புரிந்த சமயமே சுனாமி ஏற்பட்டது.

இதன்போது வல்வெட்டித்துறையில் நின்ற படகுகளிற்கு சுனாமி உதவிமூலம் மாற்றுத் தொழிலிற்கான அனைத்து தொழில் உதவியும் வழங்கப்பட்டதோடு,
குருநகரைச் சேர்ந்த 39 படகுகளின் உரிமையாளர்களிற்கும் யாழ் மாவட்ட சம்மேளணம்
மூலம் 3 லட்சம் ரூபா பணமும் அமைச்சு மூலம் தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இதன் மூலம் இத் தொழிலை முற்றாக தடுக்க முற்பட்ட நேரம் அமைச்சர் டக்ளஸ்
தேவானாந்தவே 3 மாதங்களிற்கு தற்காலிக அனுமதி என்னும் பெயரில் அனுமதி வழங்கியமையினாலேயே
இன்று யாழில் 600 படகுகள் நிற்கின்றது.

இவற்றை தடுக்க முடியாத அமைச்சர் இந்திய படகுகளிற்கு அனுமதியின்போது இந்தியாவின்
ரோளர் படகு ஊடுருவ மாட்டாது என்பதனை அமைச்சர் உறுதிப்படுத்தி விட்டாரா எனக் கேள்வி எழுப்பினார்.

இதேநேரம் ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சமாச செயலாளர் ஏ.அன்னராசா கருத்து
தெரிவிக்கையில்,

இழுவை மடியை முதலில் நிறுத்திய பின்பே எது தொடர்பாகவும் பேச முடியும்.
மாறாக இழுவை மடியை நிறுத்தாமல் வேறு மாற்று நடவடிக்கை எதுவானாலும் எழுத்தில் இருக்கலாம் இதனை முறையாக கண்காணிக்கவே முடியாது.

அனுமதி வழங்கும் பொறிமுறை என்பது அரசினுடையது என்பதுபோல் கண்காணிக்கும்
அதிகாரமும் அதற்கான பொறுப்பும் யாருடையது.

இதன் மூலம் வரும் வருமானம் வடக்கு மீனவர்களிற்கு என்று பேச்சில் கூறினாலும் இதன்மூலம்
அரசும் அரச அமைச்ஞர்களும் தம்மை வளர்க்கவே முயற்சிக்கின்றனர்.

இந்திய மீனவர்களின் படகை ஏலத்தில் விற்கப்பட்டது அந்தப் பணத்தில் ஒரு ரூபாவேனும் வடக்கு மீனவர்களிற்கு வழங்கப்பட்டதா,
பாதிக்கப்பட்டது வடக்கு மீனவன், பகைமை ஏற்பட்டது வடக்கு மீனவன் லாபம் அடைந்தவர்கள் யார்.

இவை தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) 40ற்கும் மேற்பட்ட மீனவப் பிரதிநிதிகள் கூடி
ஆராய்ந்து ஓர் முடிவை எட்டவுள்ளோம் என்றார்.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளணத் தலைவர் யஸ்ரின் சொய்சா தனது கருத்தை தெரிவிக்கையில்,

தற்போது அனுமதி இல்லாத காலத்தில் இவ்வளவு படகுகள் ஊடுருவும் நிலையில் ஏதோ ஒரு அனுமதியை வழங்கினால் அனுமதி உடையோர் முன்னாள் படையாகவும்,
அனுமதி அற்றோர் பின் படையாகவும் ஊடுருவும்போது எவ்வாறு தடுக்கப்போகின்றனர்.

அனுமதி வழங்கும் பணத்தை வடக்கு மீனவர்களிற்கே வழங்குவதாக பொய் உரைக்கப்பட்டு எவரின் சட்டைப்பை நிரப்பப்படுமோ எமக்குத் தெரியாது.
ஏனெனில் அதிகாரத்தில் உள்ள அமைச்சர்களின் குணநடை எமக்கு நன்கு தெரியும்.

இதனால் எமது படகுகள் அனைத்தும் தரைக்கு ஏற்றப்பட்டு வீதிகளில் கொண்டு வந்து இறக்கப்பட்டு
பாரிய ஆர்ப்பாட்டங்களிற்கே வழி ஏற்படுத்துகின்றனர்.
அதற்கு நாம் தயாராகி விட்டோம் இதனை விரைவில் இந்த நாடு சந்திக்கும்.- என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments