இஸ்ரோவின் சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட், 3 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை சரியாக 9:18 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.
புவி கண்காணிப்பிற்காக இஓஎஸ் 7, ஆசாதி சாட் 2 மற்றும் ஜேனஸ் 1 உள்ளிட்ட 3 செயற்கைக்கோள்களை புவிவட்ட சுற்றுப்பாதையில் இஸ்ரோ நிலைநிறுத்தவுள்ளது. இதில், இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட இஓஎஸ் 7 செயற்கைக்கோள் சுமார் 156 கிலோ எடை கொண்டதாகும். ஆசாதி சாட் 2 செயற்கைக் கோளை, 75 பள்ளிகளை சேர்ந்த சுமார் 750 பள்ளி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். ஜேனஸ் 1 செயற்கைக் கோள் அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்ததாகும். இந்த 3 செயற்கைக்கோள்களை, ‘எஸ்.எஸ்.எல்.வி டி2’ ராக்கெட் மூலம் 15 நிமிட பயணத்தில் 450 கி.மீ. புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த உள்ளதாக இஸ்ரோ தெரிவித்திருந்தது.
இதனிடையே தேசிய மாணவர் படை அமைப்பின் 75 ஆவது ஆண்டு தினத்தை கொண்டாடும் வகையில், தேவிஸ்ரீபிரசாத் இசையில் உருவான பாடலை இந்த ராக்கெட் ஏவும்போது இசைக்கப்பட்டது. ஏற்கெனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி-டி1 ராக்கெட் இரண்டாம் கட்ட நிலையில் தோல்வி அடைந்தது. இந்நிலையில், சில தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று வெற்றிகரமாக எஸ்எஸ்எல்வி (SSLV-D2) ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.