அமராவதி: குடும்ப வறுமையால் பள்ளிக்கு வராத மாணவனின் வீட்டின் முன்பு ஆசிரியர் ஒருவர் தர்ணா போராட்டம் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.
தந்தையுடன் வேலைக்கு செல்ல தயாரான அந்த மாணவனை, பெரும் போராட்டத்திற்கு பிறகு பள்ளிக்கூடத்திற்கு அந்த ஆசிரியர் அழைத்துச் சென்றுள்ளார்.
அரசாங்க சம்பளம், எந்த மாணவன் வந்தாலும் வராவிட்டாலும் யாரும் எந்த கேள்வியும் கேட்கப்போவதில்லை என்ற போதிலும், ஒரு மாணவனின் படிப்பு வீணாகக் கூடாது என்பதற்காக தர்ணா போராட்டம் நடத்திய ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.பின்தங்கிய கிராமம்
தெலங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் பெஜ்ஜிங்கி என்ற கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மக்கள் வசிக்கும் கிராமம் என்பதால் மொத்தமே அந்தப் பள்ளியில் 64 மாணவ – மாணவிகளே பயின்று வருகின்றனர். இதில் 10-ம் வகுப்பில் வெறும் 6 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு வரும் மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.பள்ளிக்கு வராத மாணவன்
இந்நிலையில், அந்தப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்த நவீன் என்ற மாணவன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. மற்ற மாணவர்களிடத்தில் இதுகுறித்து கேட்ட போது, நவீனுக்கு உடல்நிலை சரியில்லை.. இனி அவன் பள்ளிக்கு வர மாட்டான் என அவனது தாயார் கூறியதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த மாணவனின் வீட்டுக்குச் சென்று என்ன நிலவரம் என பார்த்து வருமாறு ஆங்கில ஆசிரியர் பிரவீன் குமாரிடம் தலைமையாசிரியர் கூறியிருக்கிறார்.குடும்ப வறுமை
இதையடுத்து, ஆசிரியர் பிரவீன் குமார் இரு தினங்களுக்கு முன்பு மாணவன் நவீன் குமார் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது நவீன் குமாருக்கு உடல்நிலை நன்றாக இருந்துள்ளது. எனவே ‘ஏன் பள்ளிக்கு வரவில்லை’ என ஆசிரியர் கேட்டுள்ளார். அதற்கு ஒன்றும் சொல்லாமல் மாணவன் நவீன் மவுனமாக இருந்துள்ளான். தொடர்ந்து ஆசிரியர் வற்புறுத்தி கேட்கவே அவனது தாயார், குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், கணவருடன் சேர்ந்து நவீன் ஏதேனும் கூலி வேலைக்கு சென்றால்தான் வாழ்க்கையை நடத்த முடியும் எனவும் கூறியிருக்கிறார்.தர்ணா போராட்டம்
ஆனால், ஆசிரியரோ குடும்ப வறுமை காரணமாக பிள்ளையை வேலைக்கு அனுப்புவது சட்டப்படி குற்றம் என்றும், அவனை படிக்க வையுங்கள் எனவும் வலியுறுத்தியுள்ளார். ஆனால், அவர் எவ்வளவு வலியுறுத்தியும் அவர்கள் நவீனை பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். இதையடுத்து, மாணவனின் வீட்டு வாசலிலேயே ஆசிரியர் பிரவின் குமார் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். ‘இப்போது இருக்கும் வறுமைக்கு பயந்து நவீனை வேலைக்கு அனுப்பினால், நாளை உங்கள் வம்சமே வறுமையில் வாடும்’ எனக் கூறி படிப்பின் அவசியத்தை அவர்களுக்கு புரிய வைத்தார். ஆசிரியரின் இந்த அறிவுரையை கேட்ட அவர்கள், நவீனை அவருடன் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஒரு மாணவனின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தர்ணா போராட்டம் நடத்தும் அளவுக்கு சென்ற ஆசிரியர் பிரவீன் குமாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.