காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என்ற நாடு தழுவிய நடைபயணத்தை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கினார். இந்த பயணத்தை கன்னியாகுமரியில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முதல்கட்டமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைபயணம் நடைபெற்றது. பின்னர், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தற்போது பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் திமுக எம்.பி கனிமொழி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, ஆர்.பி.ஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், இந்திய உளவுப்பிரிவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாட், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த யாத்திரை ஜனவரி 30ம் தேதி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைய உள்ள நிலையில், இதன் நிறைவு விழாவில் பங்கேற்க இந்திய அளவில் முக்கியமான 21 அரசியல் கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.