கர்நாடக வனத்துறையினரால் சுடப்பட்டதாக கூறப்படும் ராஜா என்பவர், பல ஆண்டுகளாக வன விலங்குகளை வேட்டையாடி வந்ததாக சேலம் காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் உடல் கடந்த 17ம் தேதி, ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி அருகே பாலாறு பகுதியில் தண்ணீரில் மிதந்தபடி சடலமாக மீட்கப்பட்டது. இது பற்றி விசாரித்த சேலம் மாவட்ட கண்காணிப்பாளர், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் , உயிரிழந்த ராஜா, வனவிலங்குகளை வேட்டையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் கடந்த 2014ம் ஆண்டு பழனி என்பவருடன் ராஜா சேர்ந்து கர்நாடக வனப்பகுதிக்கு வேட்டைக்கு சென்றபோது, வனத்துறையினர் சுட்டதில் பழனி உயிரிழந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கர்நாடக வனத்துறை சாவடியை சேதப்படுத்தியதால் கர்நாடகத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
வன விலங்குகள் வேட்டையாடியது தொடர்பாக ராஜா மீது சென்னம்பட்டி வனச்சரகத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எஸ்.பி. தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் கடந்த 14ம் தேதி, ராஜா தனது நண்பர்களுடன் கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைப்பகுதிக்கு வன விலங்குகளை வேட்டையாட சென்றதாகவும் அங்கு கர்நாடக வனத்துறையினருக்கும், ராஜாவின் நண்பருக்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.