பல்லடம் அருகே காதலிக்கு உயிருடன் தீ வைத்த காதலனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் பெத்தாம்பாளையம் சாலையில் பனைப்பாளையம் பகுதியில் இளம்பெண் ஒருவர் உடலில் உடைகள் இல்லாமல் உடல் முழுவதும் தீயால் எரிந்த நிலையில் காப்பாற்றுங்கள் என அலறி கொண்டே காட்டு பகுதியிலிருந்து ஓடி வந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இளம்பெண் தானாக தற்கொலை செய்ய முயற்சித்து தீ வைத்து கொண்டாரா அல்லது கொலை செய்யும் நோக்கில் வேறு யாரேனும் தீ வைத்தார்களா என விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த இளம்பெண் ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த பூஜா (19) என தெரியவந்தது. மேலும் அதே பகுதியில் குடியிருந்து வரும் லோகேஷ் என்ற வாலிபரும் பூஜாவும் ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததும், கடந்த 8 மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லோகேஷ் மற்றும் பூஜா இருவரும் இன்று தனியாக காட்டு பகுதிக்கு சென்றதாகவும், அப்போது பூஜா லோகேஷிடம் உடனடியாக திருமண செய்ய சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் பூஜாவை கல்லால் அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயத்துடன் மயக்கமடைந்த பூஜாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி செய்ததும் தெரிய வந்தது.