உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹி என்ற பகுதியில் உள்ள சுர்வாயா என்ற பகுதியை சேர்ந்தவர் அனுராதா பின்த். 15 வயது மாணவியான இவர், கடந்த புதன்கிழமை தனது உறவினர் நிஷாவுடன் கோச்சிங் வகுப்புக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த அரவிந்த் விஸ்வகர்மா என்ற 22 வயது இளைஞர் இரு சக்கர வாகனத்தில் வந்து சிறுமியை வழிமறித்துள்ளார். பின்னர் தன்னிடம் இருந்து துப்பாக்கியை எடுத்து சிறுமியின் தலையில் சுட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதை பார்த்து சிறுமியின் உறவினரும், அக்கம்பக்கத்தினரும் பதறிப்போய் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மாணவி அனுராதாவை அரவிந்த் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் மாணவி, அரவிந்தின் காதலுக்கு தொடர்ச்சியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் தாங்காமல் தான் அரவிந்த் இந்த கொடுஞ்செயலை செய்துள்ளது அம்பலமானது. இந்நிலையில், தலைமறைவான அரவிந்த் அவருக்கு துப்பாக்கி ஏற்பாடு செய்து கொடுத்த கூட்டாளி சுனில் ஆகியோரை பதோஹி காவல்துறை கைது செய்துள்ளது. இருவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.