கிளிநொச்சி – பூநகரி 4 ஆம் கட்டையைச் சேர்ந்த பாலச்சந்திரன் இசைமாறன் என்ற இளைஞன் (வயது-23) பாம்பு தீண்டி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்..
கிளிநொச்சி – பூநகரி 4 ஆம் கட்டையைச் சேர்ந்த குறித்த இளைஞன் நேற்று (17) இரவு வழமை போன்று தனது அறைக்குள் தூங்குவதற்காக சென்றுள்ளார்.
விடிந்து வெகு நேரமாகியும் குறித்த இளைஞன் நித்திரையால் எழும்பவில்லை என்ற காரணத்தினால் தாயார் போய் இளைஞனை எழுப்பியுள்ளார்.
இளைஞன் வாயில் நுரை தள்ளிபடி பேச்சு மூச்சின்றி அசைவற்று கிடந்ததை பார்த்து தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதனையடுத்து இளைஞனை உறவினர்களின் உதவியுடன் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு இளைஞனைப் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரியவந்துள்ளது.
ஆனால் குறித்த இளைஞனின் உயிரிழப்பிற்கான காரணம் உடனே தெரியவில்லை,
பின்பு இளைஞனின் உடலை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய போது பாம்பு தீண்டியதால் ஏற்பட்ட விசம் உடலினுள் பரவி தான் அவருக்கு மரணம் சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.
குறித்த இளைஞனின் இழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இளைஞனது இறுதிக்கிரியைகள் அவரது வீட்டில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என உறவினர்கள் குறிப்பிட்டனர்.