ஐந்து தமிழ்க் கட்சிகள் புதிதாக இணைந்து உருவாக்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணையுமாறு இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆனால், வீட்டுச் சின்னத்தை மீண்டும் ஏற்றுக்கொள்ள புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இல்லை எனவும் அவர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றாக இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணியாக, எமது இனத்திற்கான பலம் பொருந்திய கட்டமைப்பாக தோற்றம் பெறவேண்டும் என்ற கோரிக்கையை மறுதலித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியாக உருவாக்குவதற்கு மறுப்புத் தெரிவித்தும் தானாகவே அதிலிருந்து வெளியேறியதால் 5 கட்சிகள் தமிழ் மக்களின் நலன்களையும் நம்பிக்கையையும் காப்பாற்றும் பொருட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தம்மைப் பிரகடனப்படுத்திக் கொண்டது.