திருவனந்தபுரம்: கேரளாவில் பத்தினம் திட்டா பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரியை சேர்ந்த பெண் உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்டனர். இந்த சம்பவம் கேரளா மற்றும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண்ணின் உடல் பாகங்கள் சமீபத்தில்தான் அவரது மகன்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் கொச்சியை சேர்ந்த பெண் ஒருவரை நரபலி கொடுக்க முயற்சி நடந்துள்ளது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:- குடகு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கொச்சியில் தங்கி உள்ளார். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் மனம் உடைந்து காணப்பட்டார். இது பற்றி அவர் அந்த பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரிடம் கூறியுள்ளார். அவர் திருவல்லாவை அடுத்த குட்டபுழாவில் மந்திரவாதி ஒருவர் இருப்பதாகவும், அவரை சந்தித்து பேசினால் பிரச்சினை தீரும் எனவும் கூறினார்.
இதற்கு அந்த பெண் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரது நண்பர், பெண்ணை திருவல்லா, குட்டபுழாவுக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் மந்திரவாதியை சந்தித்தனர். அவர் ஒரு பூஜை நடத்தினால் பிரச்சினை தீரும் என கூறியுள்ளார். இதற்காக பூஜை ஏற்பாடுகள் நடந்தபோது மந்திரவாதியும், பெண்ணின் நண்பரும் ரகசியமாக பேசிக்கொண்டிருந்தனர். இதனை அந்த பெண் ஒட்டுக்கேட்டபோது அவர்கள் பெண்ணை வாளால் வெட்டி நரபலி கொடுக்க திட்டமிட்டது தெரியவந்தது. உடனே அந்த பெண் அங்கிருந்து தப்பி வெளியே ஓடிவந்தார். பின்னர் தனது உறவினர்களிடம் இது பற்றி கூறினார். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இதுபற்றிய தகவலை போலீஸ் ஏ.டி.ஜி.பி.க்கு அனுப்பி வைத்தனர். அவர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார். கேரளாவில் பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.