கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் இளங்கோ- பத்மாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பொதுக் குழாயில் பத்மாவதி தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அதேபோல் பத்மாவதி வீட்டிற்கு எதிரே வசித்து வரும் கார்த்தி என்பவரின் மனைவியும், பொது குழாயில் தண்ணீர் பிடிக்க வந்துள்ளார்.
தண்ணீர் பிடிப்பதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அழுதுகொண்டு கார்த்தியின் மனைவி கார்த்தியிடம் கூறியுள்ளார். மனைவியின் கண்ணீரை கண்டு ஆத்திரமடைந்த கார்த்தி தனது கறிக்கடையில் வைத்திருக்கும் கறி வெட்டும் அறிவாளை எடுத்துக்கொண்டு இளங்கோவின் வீட்டிற்கு சென்று அரிவாளால் இளங்கோவையும், அவரது மனைவி பத்மாவதியும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
இதில் இளங்கோவனுக்கு கையிலும், பத்மாவதிக்கு தலையில் பலமாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த பத்மாவதி பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கரூர் போலீசார் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும், தப்பி ஓடிய கறிக்கடை உரிமையாளர் கார்த்தியை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சாதராண குழாய் சண்டை கொலையில் முடிந்த சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.