கொரோனா புதிய அலை காரணமாக சீனா கடந்த சில வாரங்களாக திணறி வருகிறது. சீனாவின் நிலைமை அந்நாட்டை மட்டுமல்லாது சர்வதேச நாடுகளை மீண்டும் பீதியடைய வைத்துள்ளது.
முதன்முதலில் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பானது 2019ஆம் ஆண்டில் முதன்முதலாக சீனாவில்தான் கண்டறியப்பட்டது. இரண்டு ஆண்டுகளில், முககவசம், தடுப்பூசி உள்ளிட்ட யுக்திகளைக் கொண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. அதேவேளை, சீனாவில் கடந்த சில வாரங்களாகவே உருமாறிய கொரோனா பரவல் தலைதூக்கியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து மருத்துவமனையில் கூட்டம் அலைமோதி வருகின்றன. அங்குள்ள மயானங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்களின் வரத்து வழக்கத்தை விட அதிகமாக உள்ளது.இந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறித்து சீன தேசிய சுகாதார ஆணையம் நடத்திய ஆய்வு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசு ஆவணம் நேற்று சமூக வலைதளப் பக்கத்தில் பரவி வைரலானது. அதில் டிசம்பர் 1 முதல் 20ஆம் தேதி வரை சீனாவில் கிட்டத்தட்ட 25 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது பரபரப்பை கிளப்பிய நிலையில், சீனாவின் நிலைமை குறித்து உலக நாடுகள் மேலும் கவலை தெரிவிக்கத் தொடங்கின. இது போன்ற எதிர்வினைகளால் சீனா அரசு தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது.