வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் இன்று அதிகாலை வேளையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதை நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) உறுதிபடுத்தியுள்ளது. அதன்படி, இன்று பிப்ரவரி 13ஆம் தேதி அதிகாலை 4.15 மணியளவில் சிக்கிமின் யுக்சோம் பகுதியில் இருந்து 70 கிமீ தூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இருந்தது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி என்பது, அட்சரேகை 27.81 மற்றும் தீர்க்கரேகை: 87.71, என்று குறிப்பிட்டுள்ளது. மாநிலத்தின் தலைநகர் கங்டோக்கில் இருந்து 116 கிமீ தொலைவில் இந்த யுக்சோம் நகர் உள்ளது. அங்கிருந்து 70 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்துள்ளது.இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித உயிர்சேதமோ பொருள் சேதமோ ஏற்படவில்லை.
அதேவேளை, நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். மற்றொரு வடகிழக்கு மாநிலமான அசாமிலும் நேற்று மாலை இதுபோல லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
துருக்கி – சிரியா எல்லையை மையமாகக் கொண்டு கடந்த வாரம் ஏற்பட்ட கோர நிலநடுக்கத்தில் சுமார் 30,000 மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் பெரும் பாதிப்பை கண்டனர். அப்படியிருக்க வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.