மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சவேரி பஜார் பகுதியில் தங்க வியாபாரம் செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. நேற்று முன் தினம் அங்கு 3 ஆண்கள், ஒரு பெண் என 4 நபர்கள் பரபரப்பாக உள்ளே நுழைந்துள்ளனர். முகப்பில் உள்ள வரவேற்பாளரை தாக்கி நாங்கள் அமலாக்கத்துறையில் இருந்து ரெய்டுக்காக வந்துள்ளோம் அலுவலகம் எங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது எனக் கூறியுள்ளனர்.
நான்கு பேரும் தங்கள் ஐடி கார்டுகளை காட்டி நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர்களின் செல்போன்களை பறித்து வைத்துக்கொண்டனர். பின்னர் உங்கள் முதலாளி விராட் மாலி எங்கே எனக் கோபமா கேட்டு விசாரித்துள்ளனர். நிறுவன ஊழியர்களிடம் இருந்து சாவிகளை பிடுங்கி சோதனையிட்டு அங்கிருந்து 3 கிலோ நகை மற்றும் ரூ.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த நிறுவனத்தின் பழைய அலுவலகம் அருகே உள்ள நிலையில் ஊழியர்களுக்கு விலங்கு மாட்டி அங்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறிது நேரம் விசாரணை நடத்துவது போல நடித்துவிட்டு, சாட்சியங்களை வாக்குமூலமாக வாங்கப் போகிறோம். அதுவரை காத்திருங்கள் எனக் கூறி பறிமுதல் செய்த 3 கிலோ தங்கம் மற்றும் ரூ.15 லட்சம் பணத்துடன் தப்பியுள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.2 கோடி
அதிக நேரமாகியும் அதிகாரிகள் திரும்பி வராததால் நிறுவன மேலாளருக்கு சந்தேகம் வரவே காவல்துறையை தொடர்பு கொண்டனர். அப்போது தான் இது ஒரு மோசடி ரெய்டு, அந்த நான்கு போரும் கொள்ளைக்காரர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து மும்பை காவல்துறையினர் அப்பகுதியில் இருந்து சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டனர்.
காவல்துறை நடத்திய தேடுதல் வேட்டையில் டோங்க்ரி, மல்வானி ஆகிய பகுதியில் பதுங்கியிருந்து குற்றவாளிகளான முகமது பாசல், முகமது ரபிக் மற்றும் விசாகா முதாலே என்ற பெண் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தங்கத்தையும் பணத்தையும் மீட்டுள்ளனர். மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஏழு நாள் போலீஸ் விசாரணைக்கு காவலில் எடுக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள நான்காவது நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.