கர்நாடகாவில் இந்து அறநிலையத்துறை ஆணையராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி, பல ஊழல்களில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரியான ரூபா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து ரூபா மீது ரோகிணி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உயர் அதிகாரிகள் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததையடுத்து, இருவரையும் கர்நாடக அரசு காத்திருப்பு பட்டியலில் வைத்தது.
இந்த நிலையில் ரூபா தனது முகநூல் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், ரோகினி சிந்துரிக்கு எதிராக நான் எழுப்பிய ஊழல் விவகாரத்தில் கவனம் செலுத்துங்கள். சாதாரண மனிதனின் வாழ்க்கையையும் ஊழல் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு பெண் ஐபிஎஸ், கர்நாடகத்தில் ஒரு ஐஏஎஸ் இறந்தது தொடர்பாகவும், மற்றொரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு விவாகரத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்றும் ரூபா கேட்டுக்கொண்டுள்ளார். தானும் தன் கணவரும் இன்னும் ஒன்றாக இருக்கிறோம் என்றும், தாம் வலுவான பெண்ணாக உள்ளதாகவும் கூறியுள்ள அவர், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பரப்புவதாக ரூபாவிற்கு ரோகிணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால், ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு, வழக்கு தொடர இருப்பதாக ரோகிணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனக்கு எதிராக அவதூறாக பேச தடை விதிக்க வேண்டுமென பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் ரூபாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் ரோகிணி.