உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் இணைந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் தாய் மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தெரு நாடகம் நடத்தினர்.
உலக அளவில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் அதில் குறிப்பிட்ட சில நூறு மொழிகள் மட்டுமே கல்வி முறைகளில், பொது இடங்களிலும் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது. மேலும் பல்வேறு மொழிகள் அழிந்து வரும் சூழலிலும் உள்ளன.
மொழி, கலாச்சார, பன்முகத்தன்மை மற்றும் பன்மொழி தன்மையை மேம்படுத்தும் வகையில் தாய்மொழி தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சர்வதேச தாய்மொழி தினம் முதன் முதலில் ஐநா பொதுச் சபையின் தீர்மானத்தில் கடந்த 2002ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. அப்போது முதல் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் சர்வதேச தாய்மொழி தினத்தை கொண்டாடினர். தாய் மொழியின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் பறைசாற்றும் வகையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மாணவிகள் இணைந்து தெரு நாடகம் நடத்தினர்.
அப்போது தாய் மொழியை கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியம், தாய் மொழியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர். இதனை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட மக்கள் பார்த்து ரசித்தனர்.