துருக்கி, சிரியா உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும் என்று முன்பே கணித்த டச்சு ஆய்வாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ் அடுத்து இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்து ட்வீட் செய்துள்ளார். இவரது ட்வீட் தற்போது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி 6 அன்று துருக்கியில் உள்ள காசியான்டெப்பை மையமாக கொண்ட முதல் நில அதிர்வு உள்ளூர் நேரப்படி அதிகாலை 04:17 மணியளவில் உணரப்பட்டது. அடுத்தடுத்து கஹ்ரமன்மாராஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கி, மற்றும் சிரியா நாடுகளில் இருந்த பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவதுபோல இடிந்து விழுந்துள்ளது.
அதற்கு பின்னரும் தொடர்ந்து நில அதிர்ப்புகள் 4 ரிக்டர் வரை பல்வேறு இடங்களில் பதிவானது. இதனால் துருக்கி மற்றும் சிரியாவின் பல நகரங்கள் உருமாறி காணப்படுகிறது, மீட்பு பணி இரவு பகலாக நடந்து வருகிறது. இறப்பு எண்ணிக்கை என்பது பதினைந்தாயிரத்தை தண்டி விட்டது.
இந்நிலையில், இந்த நில அதிர்வுகள் சிரியா, லெபனன், துருக்கி உள்ளிட்ட நாடுகளை தாக்கும் என்று சோலார் சிஸ்டம் ஜியோமெட்ரி சர்வேயின் (SSGEOS) ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ், பிப்ரவரி 3 அன்று ட்வீட் செய்திருந்தார். அதாவது விரைவில் மத்திய – தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும் என்று கணித்து ட்வீட் செய்திருந்தார். அதேபோல பிப்ரவரி ஆறாம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீபோல் பரவி வருகிறது. அதில் அவர் ஆப்கானிஸ்தானில் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள பகுதியில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் தொடங்கி, பாகிஸ்தான் வழியாக பயணித்து இந்தியாவை அடையும் எனவும், இந்திய பெருங்கடலில் சென்று இது முடிவடையும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். வளிமண்டல ஏற்ற இறக்கங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த பகுதிகளில் பெரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதை துல்லியமான கணிப்பு இல்லை. வளிமண்டல சலனம் எல்லாமே நிலநடுக்கத்தில் முடியாது. இது ஒரு தோராயமான கணிப்பு மட்டுமே என்று கூறியுள்ளார்.