சூரியவெவ மஹாவலிகடார வாவியில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று சிறுமிகள் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. 3 மாதங்களின் முன்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த தாத்தாவின் நினைவு நாளுக்காக சூரியவெவிற்கு சென்ற போதே இவர்கள் இந்த அனர்த்தத்திற்கு உள்ளாகினர்.
10, 16, 18 வயதான மூன்று சிறுமிகளே இவ்வாறு உயிரிழந்தனர்.
சனிக்கிழமை (12) படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அன்றைய தினமே 10 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. மறுநாள் 16, 18 வயதான சகோதரிகளின் சடலங்கள் மீட்கப்பட்டன.
சூரியவெவ, மஹாவலிகடாரவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் நீரில் மூழ்கி உயிரிழந்த அவர்களின் தாத்தா சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு நவம்பர் 13 ஆம் திகதி நடைபெறவிருந்தது. .இதில் கலந்து கொள்வதற்காக உயிரிழந்த மூன்று மாணவிகள் மற்றும் உறவினர்கள் குழுவினர் சூரியவெவ மஹாவெலிகடாரக்கு வஅ ந்திருந்தனர். இந்தக் குழுவினர் விடியும் வரை உறவினர் வீடுகளில் உறங்கி, காலையில் எழுந்து அன்னதானத்திற்கு உதவி செய்தனர்
இதன்போது, குருநாகலில் இருந்து வந்த ஒரு குழுவினர் படகு சவாரி செய்வதற்காக உறவினர் ஒருவருடன் மஹாவலிகடார குளத்திற்கு சென்றுள்ளனர். முதலில் நால்வர் மட்டுமே படகில் சென்றுள்ளனர். அப்போது மேலும் நான்கு பேர் வந்தனர். பின்னர் எட்டு பேரும் படகில் நெருக்கியடித்து குளத்தின் நடுப்பகுதிக்கு சென்றுவிட்டனர். 08 மாத கைக்குழந்தையும் படகில் ஏற்றிச் செல்லப்பட்டது. எட்டு பேரும் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் சிறிய படகில் பயணித்துள்ளனர், அவர்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டும், கைகளால் ஒருவர் மீது ஒருவர் நீரை அடித்து விளைாயடியுள்ளனர்.
படகு அதிக வேகத்தில் முன்னோக்கி சென்று குளத்தின் நடுப்பகுதியை அடைந்த பின்னர், படகு கவிழ்ந்தது. படகு ஓட்டிச் சென்ற நபர், நீரில் மூழ்கிய தாயையும், 8 மாத சிசுவையும் மேலும் மூவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளார்.
குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள், இந்த விபத்தை அவதானித்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படகோட்டிக்கு உதவி செய்து, 5 பேரையும் மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து படகோட்டியான லஹிரு கூறியதாவது: ஆரம்பத்தில் நான் 4 பேருடன் படகில் சென்றேன். அப்போது பெண்கள் அதிக தூரம் செல்ல வேண்டாம் என்றனர். அதன் காரணமாக நான் படகை அதிக தூரம் கொண்டு செல்லாமல், 4 பேரையும் விரைவில் கரைக்கு அழைத்து வந்தேன்.
அப்போது மேலும் 4 பேர் வந்து, ஆற்றுக்குள் படகு சவாரி செல்ல வேண்டுமென்றார்கள். இதனால் 8 பெண்களும் அதில் ஏறினார்கள். பலர் படகில் ஏறியதால், அதிக எடையென கூறி, அளவிற்கு அதிகமாக ஏற வேண்டாம் என்றேன். ஆனால் ஆற்றுக்குள் அழைத்துச் செல்லுமாறு அந்த பெண்கள் கெஞ்சினார்கள்.
படகிற்கு வெளியே சரியக்கூடாது என கூறி அவர்களை அழைத்துச் சென்றேன். ஏரியின் நடுவிற்கு செல்லும் வரை அவர்கள் அசையாமல் இருந்தனர். ஆனால் ஏரியின் நடுவிற்கு சென்றதும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கைகளால் நீரை அடிக்கத் தொடங்கினார்கள். இதனால் படகு ஆடத் தொடங்கியது. நான் படகை விரைவாக கரைக்கு திருப்ப முயன்ற போது, படகு கவிழ்ந்தது.
படகில் இருந்த அனைவரும் தண்ணீரில் விழுந்தனர். ஒரு பெண் தண்ணீருக்குள்ளிருந்து கைகளில் கைக்குழந்தையுடன் மேலெழுவதை பார்த்தேன். உடனே கைக்குழந்தையை பிடித்தேன். அந்தப் பெண், கவிழ்ந்த படகில் ஏறிக் கொண்டார். என்னால் முடிந்த வழிகளில் அவர்களைக் காப்பாற்றினேன். அதற்குள் எனக்கும் முடியாமல் போனது. பின்னர் ஒரு குழு வந்து என்னையும், அந்தப் பெண்ணையும், கைக்குழந்தையையும் காப்பாற்றியது“ என்றார்.
படகில் 8 பேர் சென்ற நிலையில் 5 பேர் காப்பாற்றப்பட்டனர்.
நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் குருநாகல், பிஹிம்புவ, மாலம்பே கொலனி பகுதியைச் சேர்ந்தவர்கள்.
10 வயதான தருஷி மிஹிரங்கி சேனாதீர, ஓகொடபொல கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்தார். பஸ்நாயக்க முதியன்சலாகே விஷ்மி ஹன்சிகா, குருநாகல் கோனிகொட மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தவர். அவரது சகோதரி 18 வயதான டிலக்ஷி மதுஷிகா குருநாகல் இப்பாகமுவ மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்றார்.
இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்த 10 வயது சிறுமியின் தந்தை திலீப் சேனாதீர கண்ணீர் மல்க கூறியது: இந்த பிள்ளைகள் ஏரிக்கி செல்வதாக என்னிடம் கூறியிருந்தால் நான் உறங்கியிருக்கவே மாட்டேன். அதற்கு முன், என் மகனை எங்கும் செல்ல வேண்டாம் என்று கூறினேன். அப்பா நாங்கள் கொய்யா பழங்களை மட்டும் பறிக்கப் போகிறோம் என்றார்கள். இவ்வாறு கூறிய சிறுவர்கள் ஏரியில் படகு சவாரி சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 11ஆம் திகதி மாலை சுமார் 4 மணியளவில் சூரியவெவக்கு வருவதற்காக குருநாகலிலிருந்து புறப்பட்டோம். மறுநாள் சூரியவெவ சென்றடைந்த போது சுமார் 2.30 மணி. தூங்கி, காலையில் எழுந்து நினைவுநாள் வேலையில் கலந்து கொண்டோம்.
சூரியவெ வீட்டிற்கு நாங்கள் வந்ததும், எங்கும் செல்ல வேண்டாம் என்று திரும்பத் திரும்பச் சொன்னேன். அதன் பிறகுதான், நான் குட்டித் தூக்கம் போடச் சென்றேன். நாங்கள் இங்கு வரும்போது, குழந்தைகள் இந்த ஏரிக்கு செல்வது வழக்கம். என் பிள்ளைக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? தந்தை அழுது கொண்டே கூறினார்.
படகில் சென்ற 5 பேர் மீட்கப்பட்டாலும், 3 பேர் தண்ணீரில் மாயமாகினர். காணாமல் போன சிறுமிகளை ஊர் மக்கள் பல மணி நேரம் தேடுதல் வேட்டை நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இச்சம்பவம் குறித்து அறிந்த சூரியவெவ பொலிசார் உயிர்காக்கும் குழுவினருடன் வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சூரியவெவ பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில், கிரிந்த கடற்படைப் பிரிவைச் சேர்ந்த நீர்மூழ்கிக் குழுவினர், குளத்தின் அடிப்பகுதியில் தேடியபோது, மாலை 4.30 மணியளவில் 10 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சூரியவெவ பிரதேசத்தில் அடைமழை பெய்ததால் காணாமல் போன ஏனைய சிறுமிகளை அன்று தேட முடியவில்லை. சீரற்ற காலநிலை காரணமாக ஏனைய இருவரின் சடலங்களையும் தேடும் பணி கைவிடப்பட்டது. 13 ஆம் திகதி காலை மீண்டும் தேடுதல் நடத்தப்பட்டு, மற்ற இரண்டு சிறுமிகளின் உடல்களும் மீட்கப்பட்டது.