மிக சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக பலரும் அரும்பாடு பட்டு பணம் சேர்க்கும் காலத்தில், ஒரு சிறுமி தனது கோடிக்கணக்கான சொத்துக்களை துறந்து துறவறம் பூண்டுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசிக்கும் வைர வியாபாரி தனேஷ் சங்வி. இவரது மனைவி அமி சங்வி. இந்த தம்பதியின் மூத்த மகள் தேவாஷி தான் தனது 9 ஆவது வயதிலேயே துறவியாகியுள்ளார்.
தனேஷின் குடும்பம் 30 ஆண்டுகளுக்கு மேலாக வைர வியாபாரம் செய்து வருகின்றது. இவரது சங்வி& சன்ஸ் நிறுவனம் வைரத்தை பட்டை தீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இவரது நிறுவனம் ஆண்டுக்கு ரூ.100 கோடி மதிப்பில் வியாபாரம் செய்து வரும் நிலையில், மூத்த மகள் தேவான்ஷிக்கு பணம் சொத்து ஆகியவற்றில் ஆரம்பம் முதலே நாட்டம் ஏதும் இல்லை.
9 வயது தேவான்ஷிக்கு ஆன்மீகம் மற்றும் எளிய வாழ்க்கையில் தான் ஈடுபாடு இருந்துள்ளது. குழந்தை பிராயத்தில் இருந்து மூன்று முறை பிரார்த்தனை செய்வது, துறவிகளை பின்பற்றுவது போன்றவற்றில் ஈடுபட்ட வந்தார்.
மேலும், இந்த சிறுமி டிவி, சினிமா ஆகியவற்றை பார்க்கமாட்டார் எனவும், ஒரு முறைக்கூட ஆசையாக ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டதில்லை எனவும் கூறப்படுகிறது.
மேலும், 367 முறை துறவறம் பூணும் நிகழ்ச்சியை பார்த்துள்ள தேவான்ஷி தானும் துறவியாக முடிவெடுத்தார். எனவே, ஜைன மதத் துறவியிடம் சென்று தனது விருப்பத்தை கூறியுள்ளார் தேவான்ஷி.
துறவுக்கான கடினமான வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக துறவிகளுடம் 600 கிமீ நடைப்பயணம் மேற்கொண்டு எளிமையான வாழ்க்கைக்கு பழகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து 9 வயது தேவான்ஷிக்கு தீட்சை தர ஜைன துறவி ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து தேவான்ஷியின் பெற்றோரின் சம்மதத்துடன், நேற்று துறவுக்கான தீட்சையை பெற்றுள்ளார்.