புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் 15 பேர் திருச்சி மாவட்டம் ஏழூர்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதாக உடற்கல்வி ஆசிரியருடன் வந்துள்ளனர். போட்டியில் பங்கேற்ற மாணவிகள் பின்னர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணை பகுதியை சுற்றி பார்த்துவிட்டு செல்லாண்டியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா உள்ளிட்ட 4 மாணவிகள் நீரில் பரிதபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மாயனூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் கரூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு 4 மாணவிகளின் உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த தமிழரசி, இனியா, லாவண்யா, சோபிகா ஆகிய 4 மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ. 2லட்சம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அளவுக்கு மீறி மணல் எடுத்ததால்தான் பள்ளம் ஏற்பட்டு, உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக மாயனூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உள்ளூர் மக்களுக்கு பள்ளம் இருப்பது தெரியும் என்பதால், அந்த பகுதிக்கு யாரும் செல்வதில்லை எனவும் கூறினர். இந்த விபத்து குறித்து பேசிய கரூர் மாவட்ட ஆட்சியர்,எச்சரிக்கையை மீறி தண்ணீரில் இறங்கியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அனுமதி இல்லாத இடங்களில் யாரும் இறங்கி குளிக்கக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.