புதிய தொழில் தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்துவதற்கான அனுமதிகளை ஒரே இடத்தில் பெறுவதற்கும் செயல்படும் இணையதளம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது. கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு தமிழக அரசு வழங்கி வரும் தொழில் சேவைகள் மற்றும் தொழில்களுக்கு பல்வேறு அனுமதிகளை ஒற்றச்சாளர முறையில் வழங்கும் இணையதளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்கு கோவையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், தமிழக அரசின் கைடன்ஸ் அமைப்பின் இயக்குநர் ஆஷா அஜித், ஃபேம் டி.என் அமைப்பின் பொதுமேலாளர் சக்திவேல், கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்கள் திருமுருகன், மருதப்பன் மற்றும் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்து அரசின் திட்டங்களை தொழில் முனைவோருக்கு எடுத்துரைத்தனர்.ஒற்றைச்சாளர முறையில் வெவ்வேறு அனுமதிகளை பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கினர். இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மூன்று மாவட்டங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கலந்துகொண்டு தங்களது சந்தேகங்களை எழுப்பினர். இதுகுறித்து கோவை மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் திருமுருகன் கூறுகையில், “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புதிதாக தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களை விரிவுபடுத்துவதற்கான அனுமதிகளை ஒரே இடத்தில் பெறுவதற்கான இணையதளம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், ஒளிவு மறைவற்ற நிர்வாகம் என்பதே இந்த கருத்தரங்கின் நோக்கம்” என்றார்.