சபரிமலையில் வரும் ஜனவரி 14 அன்று மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் நாளை டிசம்பர் 30 மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இன்று முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை சபரிமலை நடை திறந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சபரிமலையில் தற்போது மண்டல பூஜை முடிந்த நிலையில் அடுத்த மகர விளக்கு பூஜைக்கு தடையின்றி மின்சாரம் வழங்க மின் விநியோகம் செய்யும் வழித்தடங்களில் பழுத்துகள் சரி செய்யும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மின் கேபிள் செல்லும் பாதையின் ஆய்வு, மற்றும் சேதமான கருவிகள், பல்புகளை மாற்றுவது போன்ற பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.
டிசம்பர் 30ம் தேதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்.
இதே போல சன்னிதானம் செல்லும் வழியில் நீர் விநியோகத்தை முறையாக தடையின்றி வழங்க பழுதுபார்க்கும் பணிகளில் நீர்வள ஆணையம் ஈடுபட்டுள்ளது.
பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு தண்ணீர் வருவதற்கு வசதியாக, நீர்வள ஆணையம் தலைமையில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ஐந்து பம்ப் ஹவுஸ் மற்றும் பைப் லைன் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
நான்கு குடிநீர் தொட்டிகள் மூலமாக குடிநீர் சேகரித்து வருகிறது. சரம்குத்தியில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகளும், ஆறு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டியும், ஜோதி நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டியும் உள்ளன.
சபரிமலையில் மீண்டும் நடை திறக்கப்படும் டிசம்பர் 30ம் தேதிக்குள் இந்த நீர்த்தேக்கங்களில் தண்ணீர் நிரப்பப்படும். சரல்மேடு, மரக்கூ ட்டம், சபரி பீடம் ஆகிய இடங்களில் உள்ள பம்ப் ஹவுஸ் மற்றும் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவுகள் சரி செய்யப்பட்டுள்ளன. நன்னீர் உற்பத்தி செய்யும் ஆர்ஓ ஆலைகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள 12 ஆர்ஓ ஆலைகளில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு 35,000 லிட்டர் தண்ணீரை சுத்தீகரித்து விநியோகம் செய்ப்படுகிறது. மின் தடை இல்லாமல் சன்னிதானத்தில் மின் விநியோகம் செய்யும் மின் வாரியமும் குடிநீர் விநியோகம் செய்யும் நீர் வளத்துறை என மகரவிளக்கு பூஜைக்கு அடிப்படை வசதிகள் பக்தர்களுக்கு இடையூறு இன்றி வழங்க முழு வீச்சாக அனைத்து துறைகளும் பணியாற்றி வருகின்றனர்.