விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் எதிரே, பல்வேறு கட்சிகள் இணைந்து மணல் குவாரியை மூட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏனாதிமங்கலம் கிராமத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்படும். மண் அள்ளுவதால் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு மின் கோபுரங்கள், ரயில்வே பாலங்கள் சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே இவற்றை கருத்தில் கொண்டு தென்பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மணல் குவாரி இருந்தால் இனி வருங்காலங்களில் விவசாய பாசனத்திற்கு நீர் பற்றாக்குறை மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது எனவே இந்த மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழரசுக்கும் கோரிக்கை,விடுத்துள்ளனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளும் மக்கள் கட்சி,நாம் தமிழர் கட்சி, ஜனநாயக திராவிட முன்னேற்ற கழகம், தென்பெண்ணை ஆறு பாதுகாப்பு இயக்கம், கரிகால சோழன் பசுமை மீட்பு படை ஆகிய கட்சிகள் பங்கேற்றன.