தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைமுருகனுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படும் துரைமுருகன் மருத்துவமனைக்கு சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வந்தார். இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இந்நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நள்ளிரவு 1.30 மணியளவில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த மருத்துவமனை அறிக்கை இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.