Friday, May 3, 2024
Homeவானிலை செய்திமழையால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயம் … சோகத்தில் விவசாயிகள்

மழையால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயம் … சோகத்தில் விவசாயிகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, விவசாய நிலத்தில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி இருப்பதால் கரும்பு விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிய விலை கிடைக்காமல் கரும்பு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியில் வசித்து வரும் விவசாயி பன்னீர். இவர் 18 மாதங்களுக்கு முன்பு சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் தனக்குச் சொந்தமாக உள்ள நிலத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு, மழை வெள்ளம் சூழ்ந்து அறுவடை செய்ய முடியாமல் சேதமடைந்துவிட்டது.இவ்வாறு பாதிக்கப்பட்ட கரும்பை தனியார் வெல்லம் தயாரிக்கும் வியாபாரிகள் யாரும் உரிய விலை கொடுத்து வாங்க முன் வரவில்லை. அதுமட்டுமின்றி கரும்பு தோட்டத்தில் இரண்டு அடி அளவுக்குத் தண்ணீர் தேங்கி நிற்பதால் அறுவடை செய்ய முடியாமல் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் டன் ஒன்றுக்கு 1500 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரும்பு வெட்டும் கூலி, லாரி வாடகை போக மீதம் 150 ரூபாய் கிடைக்கின்றது. வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்டமுடியவில்லை என்று கரும்பு விவசாயிகள் மன வேதனை அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்த கரும்பு விவசாயி கூறுகையில், “நான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தனியாரிடம் கடன் வாங்கி 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்தேன். சில மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் நிலத்தில் அதிகமான தண்ணீர் தேங்கி அறுவடை செய்ய முடியாமல் கரும்பு பூ பூத்து போரல் ஆகி எடை குறைந்துவிட்டது.கரும்பு ஆலை வியாபாரிகள் தரமான வெல்லம் தயாரிக்க முடியாது என்று முறையான விலை கொடுத்து வாங்க முன் வரவில்லை. விவசாயம் செய்வதற்காக நான் போட்ட முதல் கூட கிடைக்கவில்லை. வங்கியில் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்டமுடியவில்லை” என்று விவசாயி வேதனை தெரிவிக்கின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை காரணமாக, சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத சூழல் இருந்த காலத்தை விட அதிக மழை பெய்து உற்பத்தி பாதிக்கப்பட்டு போட்ட முதலைக் கூட திருப்ப முடியாத இக்கட்டான சூழலில் கரும்பு விவசாயிகள் இருக்கின்றனர். இதற்கு அரசு தரப்பிலிருந்து ஏதேனும் உதவி கிடைக்குமா எனவும் கரும்பு விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கனமழை தொடரும் பட்சத்தில் விவசாயப் பணிகள் மேலும் பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments