இடம்பெறவுள்ள 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது முகநூலில் அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நபர் மஹரகமவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதானவர் 40 வயதுடையவர் என காவல்துறை கணினி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் நபர் ஒருவர் தனது முகநூலில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டதாக வந்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கமைய கணினி குற்றப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் பல்வேறு வகைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை தயாரித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்படி, அவ்வாறான கருத்துக்களை வெளியிட்ட சந்தேகநபரின் முகநூல் கணக்கை ஆராய்ந்து அவர்களின் விரிவான அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்னர், மஹரகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் நுகேகொட கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.