கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் நேற்று மதியம், மகாதி ரோட்டிலுள்ள டோல்கேட்டிலிருந்து ஹாசஹல்லி மெட்ரோ ஸ்டேஷன் வரையில், முதியவர் ஒருவரை, ஒரு கிலோமீட்டர் தொலைவு வரையில் ஸ்கூட்டரில் வாலிபர் இழுத்துச் சென்றிருக்கிறார்.
இதைக்கண்ட வாகன ஓட்டுநர்கள், அவரை தடுத்துநிறுத்தி, காயமடைந்திருந்த அந்த முதியவரை மீட்டு, அந்த வாலிபரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து பெங்களூரு மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் விசாரித்தோம், ‘‘ஸ்கூட்டர் ஓட்டிவந்த பெங்களூருவைச் சேர்ந்த சாஹில் (25), 71 வயதான முத்தப்பா ஓட்டிவந்த பொலேரோ காரில் இடித்து சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
முத்தப்பா காரிலிருந்து இறங்கியதும் சாஹில் அவரிடம் வாக்குவாதம் செய்து, அங்கிருந்து தப்ப முயன்றிருக்கிறார்.
அப்போது, முத்தப்பா அந்த ஸ்கூட்டரின் பின் கம்பியைப் பிடித்த நிலையில், ஸ்கூட்டரை நிறுத்தாமல் ஓட்டிய சாஹில், முதியவரை தரதரவென 800 மீட்டருக்கு மேல் இழுத்துச் சென்று அட்டூழியம் செய்திருக்கிறார்.
ஆட்டோ ஓட்டுநர்கள் வாகனத்தை குறுக்க நிறுத்தி சாஹிலைப் பிடித்திருக்கின்றனர். அவரைக் கைதுசெய்து விசாரிக்கிறோம். முத்தப்பாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்’’ என்றனர்.
முதியவர் என்றும் பாராமல், தரதரவென அவரை இழுத்துச் சென்ற வாலிபரின் செயல் குறித்த வீடியோவை, சமூக வலைதளங்களில் பகிர்ந்து, வாலிபரின் மனசாட்சியற்ற செயலைப் பலரும் கண்டித்துவருகின்றனர்.