கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காவிட்டால், தேசிய ஒற்றுமை நடை பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தேசிய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், தேசிய ஒற்றுமை நடைபயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பேரணியில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே, பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார். வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காவிட்டால், நடைபயணத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குஜராத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.