வடகொரியாவில் தற்போது உணவுப் பஞ்சம் நிலவும் அபாயம் அதிகமாகவுள்ளது. ஏற்கனவே வடகொரியாவில் மக்கள் சுகாதாரம், உணவு, மின்சாரம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கே கஷ்டப்படும் நிலையில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் மக்கள் பெருமளவு அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படலாம். இதனைக் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கையாக விவசாயத்தின் மேல் கவனம் செலுத்த அதிபர் கிம் ஜாங் உன், தலைவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
வடகொரியாவின் செய்தி நிறுவனம் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், ஆளும் கொரியாவின் தொழிலாளர் கட்சியின் 8வது மத்தியக் குழுக் கூட்டத்தின் 2வது நாள் நிகழ்வில் அதிபர் கிம் ஜாங் உன் இவ்வாறு கூறியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம், வடகொரியாவின் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்று அறிவித்திருந்தது. மேலும் விவசாயத்திற்கு என்று தனித்துவமாக முதல் முறை நடத்தப்படும் கூட்டம் இது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், வடகொரியா தனது அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணைகள் சோதனையைக் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.