தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.02.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 17 காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். 444 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு அடையாளமாக 5 நபர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கள் முன்னேற்றத்திற்குத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுத்தி வருவதாகவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளித்துச் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகக் காவல் துணைக் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 17 நபர்களில், 13 பெண் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 444 காவல் உதவி ஆய்வாளர்களில் 133 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.