சுமார் 5 இலட்சம் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த 18 வயது இளைஞனை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
55 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்ய 90 கிரெடிட் கார்டுகளை இந்த சந்தேகநபர் பயன்படுத்தியுள்ளதாக இணையத்தளத்தின் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் நிறுவனம் ஒன்று கடந்த 4 ஆம் திகதி கணினி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
சந்தேகநபர் நேற்று குருநாகல் தும்மல்சூரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக குழுவொன்றில் இணைந்து கொண்டு அனுமதியின்றி மற்றவர்களுக்கு சொந்தமான கடன் அட்டை தரவுகளை பெற்று சேமித்து வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் கணனியை சோதனையிட்ட போது அதில் 5 இலட்சம் கிரெடிட் கார்டுகளின் விபரங்கள் இருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தி இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கணனி, கம்ப்யூட்டர் கேமரா, உணவு, மதுபானம் உள்ளிட்ட பல பொருட்களை வாங்கியுள்ளார்.
18 வயதுடைய இந்த இளைஞன் சாதாரண பரீட்சையில் சித்தியடையாமல் கூலி வேலை செய்து இத்தொழிலை செய்து வந்ததாகவும் கையடக்கத் தொலைபேசியை வாங்கி இணையத்தளத்தை பயன்படுத்தி இந்த மோசடியை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.