திருகோணமலை – கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்திற்கு முன்பாக இன்று (02) காலை ஆசிரியர்கள் தலைமையில் எதிர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வெளி வலயத்தில் ஐந்து முதல் எட்டு வருடங்கள் ஆசிரிய சேவையை நிறைவு செய்த நிலையிலும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இன்று வரை ஒரே பாடசாலையில் பணிபுரிவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த செயற்பாட்டின் மூலம் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், இந்த திட்டமிட்ட செயற்பாடு இடைநிறுத்தப்பட்டமையினால், தாம் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் கடமையாற்ற வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே முடிவெடுக்கப்பட்ட இடமாறுதல் திட்டத்தை அரசியல் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டு பாரபட்சமற்ற முறையில் நடைமுறைப்படுத்தக் கோரி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் தலைமையில் இந்தப் பேரணி நடைபெற்றது.