உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேந்திர சைனி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். சைனியின் மனைவி ராதாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. எனவே, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தால் பிரச்னை குணமாகிவிடும் என மருத்துவர்கள் கூறிய நிலையில், கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி அந்த தனியார் மருத்துவமனையில் ராதாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் ராதாவுக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கே திரும்பி சென்று புகாரை கூறினர். ஆனால், அந்த மருத்துவமனையில் முறையான தீர்வு கிடைக்காததால், மற்றொரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.
அந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தான் அதிர்ச்சிக்குரிய தகவல் அம்பலமானது. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்ணின் வயிற்றுக்குள் பேண்டேஜ் இருந்துள்ளது ஸ்கேனில் இருந்துள்ளது. எனவே, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தான் கவனக்குறைவுடன் வயிற்றில் பேண்டேஜ் வைத்து தைத்துள்ளார் என்று குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.
அதைத்தொடர்ந்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பேண்டேஜ் அகற்றப்பட்டது. இருப்பினும், ராதாவின் உடல் நலம் தொடர்ந்து மோசமடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், உள்ளூர் வாசிகள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல்துறையினர் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து எஃப்ஐஆர் போட்டுள்ளனர்.
ராதாவின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து அதன் முடிவுகளின் அடிப்படையில் உரிய விசாரணை நடத்தப்படும் என அம்ரோஹா மாவட்ட தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜீவ் சிங்கால் கூறியுள்ளார். துறை ரீதியான விசாரணையின் படி மூன்று பேர் கொண்ட குழு சம்பவம் குறித்து விசாரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.