சென்னை: இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் சுகாதார கமிட்டி சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.
ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா இந்தியாவிலும் பரவி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த வகை கொரோனா காரணமாக இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 4 பேரும் கடந்த நவம்பருக்கு முன்பே குணம் அடைந்துவிட்டனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 129 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. இவற்றில் எத்தனை கேஸ்கள் ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா என்ற விவரம் வெளியாகவில்லை.
இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள் எண்னிக்கை 3408 என்ற அளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே பலியாகி உள்ளார். இந்தியாவில் இதுவரை அதிகாரபூர்வமாக 5,30,677 பேர் பலியாகி உள்ளனர்.
ஆலோசனை
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்பாக நேற்று நிதி ஆயோக் சுகாதார குழுவின் தலைவர் டாக்டர் விகே பால் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டியா உடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது அரசுக்கு ஆலோசனைகளை வழங்கியது இந்த அமைப்புதான். மக்கள் மாஸ்க் விதிகள், கொரோனா வேக்சின் கொடுக்க வேண்டிய காலஇடைவெளி போன்ற விதிகளை பரிந்துரை செய்தது இந்த குழுதான். இந்த நிலையில் கொரோனா பரவலை முன்னிட்டு நேற்று இவர்கள் மீண்டும் ஆலோசனை மேற்கொண்டனர்.விகே பால்
இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த விகே பால், இந்தியாவில் ஏற்கனவே 27 – 28 சதவிகிதம் பேர் முன்னெச்சரிக்கை கொரோன தடுப்பு ஊசிகளை போட்டுள்ளனர். அதாவது இரண்டு டோஸ் இல்லாமல், மூன்றாவதாக முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிக அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இன்னும் முன்னெச்சரிக்கை டோஸ் போட விரும்பும் மக்கள் அதை எடுக்கலாம். அப்போதுதான் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும்.
அச்சம் வேண்டாம்
மக்கள் அச்சப்பட வேண்டாம். மக்கள் கூட்டமான இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும். முக்கியமாக வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம். கொரோனா பரவல் பற்றி அச்சம் கொள்ள வேண்டாம். இதுவரை சர்வதேச பயணிகளுக்கான கொரோனா விதிகளில் மாற்றம் செய்யப்படவில்லை. கொரோனா சில நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனால் அது தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு இருக்கிறோம்.கொரோனா
கொரோனா இன்னும் முடியவில்லை. கொரோனா பரவல் காரணமாக எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறோம். நமக்கு கொரோனாவை எதிர்கொண்ட அனுபவம் இருக்கிறது. அதனால் மீண்டும் இதை எதிர்கொள்வோம் என்று அவர் தெரிவித்து உள்ளார். இதையடுத்து தற்போது இந்தியாவில் கொரோனா ஜீனோம் சோதனைகளை அதிகரிக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. மாநில அரசுகள் கொரோனா கேஸ்களில் ஜீனோம் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று அரசு பரிந்துரை செய்துள்ளது.
மாஸ்க் கட்டாயமா ?
இந்தியாவில் இன்னும் மாஸ்க் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவிக்கவில்லை, நிதி ஆயோக் சுகாதார குழு கூட்டமான இடங்களில் மாஸ்க் அணிய பரிந்துரை செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு இன்னும் அதற்கான சுற்றறிக்கை வெளியிடவில்லை. கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கைதான் இதில் கடைசி அறிக்கை ஆகும். அப்போது மாஸ்க் பற்றிய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அதேபோல் வெளிநாட்டு பயணிகளுக்கு ரேண்டம் கொரோனா சோதனை மட்டுமே செய்யப்படும். அது தவிர வேறு பயணம் தொடர்பான கொரோனா கட்டுப்பாடுகள் வெளியிடப்படவில்லை. இப்போது மாஸ்க் கட்டாயம் இல்லை என்றாலும் அதை அணிய வேண்டும் என்றே நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளது.