இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது,அதிமுகவின் இரட்டை இலை சின்னம் குறித்து இதுவரை எந்த பிரச்னையும் எழுப்பப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், ஒரு தரப்பை மட்டும் அங்கீகரிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால், கட்சி சின்னம் முடக்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் வாதிட்டது.
தேர்தல் ஆணையத்தின் கருத்துகளுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. தேர்தல் ஆணையம் மாறுப்பட்ட நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது. இதனிடையே தங்களின் தரப்பு கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால், கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவு தருவோம் என்று ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், அதிமுக விவகாரத்தில் இருதரப்பும் ஏன் பேசி முடிவு செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பியது. பிரச்னைகளை நீடித்துக் கொண்டே செல்ல முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினரை உள்ளடக்கிய பொதுக்குழுவே வேட்பாளரை இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வேட்பாளரை தேர்வு செய்ய பொதுக்குழுவில் வாக்கு எடுப்பு நடைபெறும் என்று கூறிய நீதிபதிகள், முடிவை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும் ஆணையிட்டனர். இந்த உத்தரவு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு மட்டுமே செல்லும் என்று கூறி, எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு முடித்து வைக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், உச்சநீதமன்றத்தின் உத்தரவு ஓபிஎஸ் தரப்பு கிடைத்த வெற்றி .சின்னம் முடங்ககூடாது என்பதே பன்னீர் செல்வத்தின் விருப்பம் என்றார். அதிமுக உட்கட்சி பூசல் குறித்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவு கருத்து தெரிவித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் நடப்பதெல்லாம் நன்மைக்கே. எங்களை பொறுத்தவரை எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறோம் எனக் கூறியுள்ளார்.