கடலூர் மாவட்டம் வடலுாரில் அருட்பிரகாச வள்ளலார் ஏற்படுத்திய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி இன்று காலை அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடந்தது. இதனைத்தொடர்ந்து காலை 7:30 மணியளவில் தர்மசாலையில் சன்மார்க்க கொடியேற்றப்பட்டது.
இதேபோல் மருதூரில் உள்ள வள்ளலார் சன்னதியிலும், கருங்குழியில் உள்ள வள்ளலார் சன்னதியிலும் கொடியேற்றம் நடந்து. அதனைத்தொடர்ந்து வடலூர் சத்திய ஞான சபையில் கொடியேற்றம் நடந்தது. வள்ளலாருக்கு சத்திய ஞானசபை கட்ட நிலத்தை தானமாக அளித்த பார்வதிபுரம் கிராம மக்கள் வரிசையாக தட்டுடன் மேளதாளம் முழங்க வந்தனர்.
பின்னர் அக்கிராம பெரியவர்கள் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் அமைந்துள்ள கொடி மரத்தில் சன்மார்க்க கொடி ஏற்றினர். இந்நிலையில், நாளை (5ம் தேதி) தைப்பூச ஜோதி தரி சன பெருவிழாவையொட்டி சத்திய ஞான சபையில் காலை 6:00, 10:00 பகல் 1:00 மணி, இரவு 7:00, 10:00 மணி, 6ம் தேதி காலை 6 மணி என 6 காலம் 7 திறைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. இதேபோல், வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வரும் 7ம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாட்டில் இருந்து ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வடலூா் தைப்பூச விழாவையொட்டி, குற்ற நிகழ்வுகளை தடுக்கவும், போக்குவரத்தை சீர் செய்யவும், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் 800 போலீசார் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். 10 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 60 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அன்னதானம் வழங்குபவா்கள் உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்ற பிறகே வழங்க வேண்டும்.
அன்னதானத்துக்கு கொண்டுவரப்படும் உணவுப் பொருள்கள் சுத்தமானதாக இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே வடலூர் தைப்பூச திருவிழா ஜோதி தரிசனத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் மது மற்றும் மாமிசக் கடைகளை நாளை முழுவதுமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.