மாந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ஷேக்காதர் அலி. இவர் சாலாமேடு பகுதியில் உள்ள தனது இரண்டரை ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பாக கட்டப்பட்ட அரசு குடியிருப்புகளுக்காக 30 வருடங்களுக்கு முன்னர் விற்பனை செய்துள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் இடத்திற்கு உரிய விலை அளிக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் சதுரடிக்கு 25 ரூபாய் வழங்க வேண்டும் என்று வழக்கு பதிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில் சதுரடிக்கு 16 ரூபாய் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஆனால் இதுவரை அவருக்கு அரசு உரிய தொகை வழங்காததால் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வழக்கு தொடுத்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி விஜயகுமார் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்திற்கு சொந்தமான அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் அடிப்படையில் அரசு நீதிமன்ற அலுவலர் மற்றும் தனது வழக்கறிஞர்கள் உடன் வந்த ஷேக்காதர் அலி விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைமை செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு சொந்தமான மேசை, பீரோ உள்ளிட்ட அசையும் சொத்துக்களை ஜப்தி செய்தனர். அரசு அலுவலகம் இயங்கிக்கொண்டிருக்கும்போது நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.